இலங்கையின் பல துறைகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க மேலும் 3 நாடுகள் இணைந்துள்ளன. எரிசக்தி , சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் ஆகிய துறைகளை மேம்படுத்தவே இவ்ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவுள்ளது. பிரித்தானியா தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் ஆதரவு தற்போது இலங்கைக்கு கிடைத்துள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரப்புக்கள் சபை உறுப்பினர் மைக்கல் நெஸ்பி பிரபு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது மீள் புதுப்பிக்கப்பக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள கரிசனையை அவர் பாராட்டினார். சூரிய மற்றும் ஏனைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்துறையினை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நெஸ்பி பிரவு இங்கு தெரிவித்தார்.
தென்கொரியாவில் வேலைவாய்ப்புக்களை அதிகளவில் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரச கொள்கைகள் தொடர்பாடல் அமைச்சர் கோ யூன்ச் சோல் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது குறிப்பிட்டார். தென்கொரியா நவீன தொழிநுட்பங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமென அவர் இங்கு உறுதியளித்தார். தென்கொரியாவின் அதிக வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை இலங்கைக்காக ஒதுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட சுற்றுலா வலயங்களை ஏற்படுத்தி எகிப்து சுற்றுலாப் பயணிகளின் விசேட அவதானத்தை இலங்கை மீது செலுத்த முடியுமென இலங்கைக்கான எகிப்து தூதுவர் மகேட் மொஸ்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது குறிப்பிட்டார். சர்வதேச மாநாடுகளின் போது இலங்கைக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.