மக்களுக்கு இலவச காணி உரிமங்களை வழங்கவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை புரட்சிகரமான ஒரு செயற்பாடு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாவலி குடியேற்றவாசிகளுக்கு உருமய வேலைத்திட்டத்தின் கீழ் இலவச காணி உரிமைகளை வழங்கும் ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவை ராஜகீய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார பிரதிபலன்கள் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் சென்றடைந்து மற்றைய பிரிவினர் துன்பங்களை அனுபவிப்பதற்கு இடமளிக்க முடியாது.
இந்த வேலைத்திட்டமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த காணி உரிமங்களுடன் அரசின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தில் இணைவதன் ஊடாக தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.