மாதிரி தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்கெண்ணும் ஒத்திகை நடவடிக்கைகள் 2 இன்றைய தினம் கண்டி மற்றும் குருநாகல் மாவட்ட செயலங்களில் இடம்பெற்றன. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய வாக்கெண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தெளிவுப்பெறுவதே இதன் நோக்கமாகும். மாதிரி வாக்கெடுப்பு அனுபவம் தொடர்பில் நாளைய தினம் விசேட ஒன்றுக்கூடலொன்று இடம்பெறவுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதில் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய் கிழமை மீண்டும் ஒன்றுக்கூடவுள்ளது. தேர்தல் வாக்கெடுப்பு காலத்தை நீடிப்பது தொடர்பில் அன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே 21 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணி நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை நாளைய தினத்துடன் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டன. அதற்கமைய 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்தார்.