அமெரிக்காவின் Baltimore துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்த கப்பல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலிலிருந்த ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் 22 இந்திய பணியாளர்களும் சேவையிலிருந்துள்ளதுடன் அவர்கள் இதுவரை கப்பலிலிருந்து வெளியேறவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டாப்ஸ்கோ ஆற்றை கடக்கும் வகையில் காணப்படும் குறித்த பாலம் 1977ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘Dali’ என்ற பெயரில் சிங்கப்பூர் கொடியின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த கப்பல் அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1.30க்கு பாலத்தின் பிரதான தூணொன்றில் மோதியுள்ளது.
இதனையடுத்து பாலம் முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் 20 பேர் ஆற்றில் வீழ்ந்துள்ளதுடன் வாகனங்கள் சிலவும் ஆற்றில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பாலம் முற்றிலுமாக உடைந்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமென அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்டிமோர் துறைமுகம் அமெரிக்காவிலுள்ள மிகவும் வேலைப்பளுமிக்க துறைமுகமாகும்.