உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
இவ்வருட உலக வானொலி தினத்தின் கருப்பொருள் “வானொலி: ஒரு நூற்றாண்டு தகவல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி” , இது இன்றைய வேகமாக வளர்ந்து வரும் ஊடக பயணத்தில் அதன் நீடித்த தாக்கத்தையும் பொருத்தத்தையும் வலியுறுத்துகிறது.
வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் துணை நின்று உற்ற தோழனாய் பலரின் வாழ்வில் அங்கம் வகிக்கும் ஓர் ஊடகம் வானொலியாகும். செய்திகள் முதற்கொண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் வரை எம் பொழுதுகளை நிரப்புகிறது.
உலகெங்கிலும் பல வானொலி சேவைகள் இருந்தாலும் இலங்கை வானொலி சேவைக்கென்று இன்றும் மதிப்பும் வரவேற்பும் அதிகம் எனலாம்.
மக்களின் உணர்வுகளை மதித்து அர்த்தமுள்ள சேவைகளை வழங்கும் வானொலிகள் மக்களின் ரசனைகளில் என்றும் உச்சமே…….