கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் உடனடியாக அது தொடர்பில் குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்வித தடைகளுமின்றி கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலக சுகாதார அமைப்பினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளின் முதல் தொகுதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிடைக்கவிருப்பதாகவும், அவை கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த 13 பேர் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்தே அங்கு கடமையாற்றும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகுந்தர மத்திய நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில், வெளிவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.