16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி இன்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கும் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஏனைய 22 மாவட்டங்களில் இருந்து தலா 40 பேருமாக 880 பட்டதாரிகளுக்கு நண்பகல் 12.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களின் செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சுக்குட்பட்ட தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளையோர் அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.