காசா படுகொலைகள் தொடர்பான உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரித்தானியாவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
லண்டனிலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு சென்ற மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம் அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி தடைவிதித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் குறித்த மருத்து நிபுணர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் இந்த நடவடிக்கை காரணமாக மருத்துவர் ஷெங்கன் நாடுகளிற்கு பயணம் செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது.
தான் பிரான்ஸ் செனெட்டில் உரையாற்ற வேண்டும் ஆனால் தனக்கு பிரான்சிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டள்ளதாக குறித்த வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.