தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 2 – 1 என இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 6 விக்கட்டுக்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவி லோரா வோல்வாட் 184 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் கவிசா தில்ஹார் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 302 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.
குறித்த போட்டியில் இலங்கை மகளிர் அணி புதிய சாதனைகளை பதிவு செய்தள்ளது. மகளிர் கிரிக்கட் அணியொன்று ஒருநாள் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை எட்டிப்பிடித்து வெற்றிபெற்ற முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
அணி சார்பாக அணித்தலைவர் ச்சாமரி அத்தபத்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒருநாள் போட்டியொன்றில் மகளிர் வீராங்கணையொருவர் பெற்றுக்கொண்ட 3வது அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
போட்டியின் ஆட்டநாயகியாகவும் அவரே தெரிவானார்.