பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தேசிய வருமான திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நிதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானதென உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனமொன்றின் பொது முகாமையாளர் ஒருவர் மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். உத்தேச சட்டமூலத்தில் வரி செலுத்தப்பட வேண்டிய மாதாந்த வருமானம் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு சுமக்க முடியாத வரிச்சுமை சுமத்தப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் ஏற்றுமதி, உள்நாட்டு கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் பலவீனமடையுமெனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.