கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு தரப்பிடமிருந்தும் 5 மில்லியன் ரூபா வரை சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு தொடர்பில் போலி விளம்பரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். விளம்பரங்களுக்கேற்ப தொடர்புகொண்டவர்கள் வங்கி கணக்குகளை ஆரம்பித்து, கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச்சான்றிதழின் பிரதிகளை மாத்திரம் சமர்ப்பிக்குமாறும் சந்தேக நபர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர்களில் ஒருவரான குறித்த பெண் போலி ஆவணங்களை பயன்படுத்தி, வைப்புத்தொகையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.