கொவிட் – 19 தொற்றினால் மூடப்பட்ட பாடசாலைகளை மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய நாளைய தினம் 5ம், 11ம் மற்றும் 13ம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. கொவிட் -19 தொற்று நிலைமையின் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் கிருமி நீக்கம் செய்தல், நேர அட்டவணை தயாரித்தல் ஆகிய செயற்பாடுகள் கடந்த வாரத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய பல கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் இரண்டாம் கட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை நாளைய தினத்திலிருந்து பாடசாலைக்கு வருகைத்தரும் ஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலையில் இருக்க வேண்டியது அவசியமில்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கால அட்டவணைக்கு ஏற்ப உரிய செயற்பாடுகளை நிறைவு செய்தால் போதுமானதென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அதிபரினால் மேலதிக பணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தை தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைக்குள் இருக்கவேண்டியது கட்டாயம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளின் சுகாதார வசதிகள் பூரணப்படுத்தப்பட்டு;ள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளது. மாணவரொருவருக்கு காய்ச்சல், இருமல், தடிமன் அல்லது வேறு ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பெற்றோர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.