புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் 66 வது வெற்றிக்கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு மக்களை சந்திக்கும் சஜித் பிரேமதாசவின் ஒரு கட்டமாக வவுனியாவின் வைரவர் புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. இங்கு அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் உரைநிகழ்த்தினர்.
அதற்கமைய தமிழ் முப்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேஷன் இக்கூட்டத்தில் உரையாற்றினார். நாட்டின் 24 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் தெரிவித்தார்.
இதேவேளை இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் உரையாற்றினார். கடந்த கால அரசாங்கத்தின் அட்டுழியங்களிலிருந்து மக்களை விடுவிக்க தற்போதய அரசாங்கம் சட்டமூலமாக உத்தரவாதங்களை கொண்டுவந்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாட்பதியுதீனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை சிதறடிக்க இனவாத சக்திகளை கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அராஜக அரசியல் நிலை ஒன்றை உருவாக்க முயல்கின்றனர். அதிலிருந்து பாதுகாக்க சமத்துவமான நாட்டை உருவாக்க சஜித் பிரேமதாசவை மக்கள் ஆதரிக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு வலியுறுத்தினார்.