நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகிறது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஜனநாயகம் மற்றும் தேசிய நல்லிணக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கமைய சட்டம் மற்றும் நிறுவன சீர்த்திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடு அபிவிருத்தியின் பாதையில் பயணிப்பதனூடாக தேசிய பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெறப்பட்ட பாரிய கடன்களை செலுத்த முடிந்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை, இந்து சமுத்திரத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கேந்திரநிலையமாக மாற்றுவதை எதிர்கால இலக்காக கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. எண்டர்ப்ரைசஸ் ஸ்ரீலங்கா, கிராம சக்தி மற்றும் கம்பெரலிய போன்ற கிராமங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் பல அரசாங்கத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் பொருளாதாரம் மற்றும் நலன்புரி அபிவிருத்திகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சர்வதேச சமூகத்தினதும், இலங்கை மக்களினதும் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. ஐரோப்பிய சங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொண்டதனூடாக பொருளாதார நன்மைகள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த மூன்று வருட காலத்திற்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு வேலைத்திட்டங்களினூடாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 300 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அபிவிருத்தி திட்டத்தினூடாக மாதிரி கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் கீழ் இதுவரை ஆயிரத்து 114 மாதிரி கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் நிறைவுற்றுள்ளன.
இன்றைய தினத்தில் மாத்திரம் நாடு முழுவதும் மேலும் 100 மாதிரி கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மொனராகலை கொடியாகலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெவிபுதகம என பெயரிடப்பட்டுள்ள 107வது மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும். 52 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதேவேளை எதிர்வரும் 21ம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.