எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா முதலாவது அபிவிருத்தி கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற வானவேடிக்கை மற்றும் இசைநிகழ்ச்சியுடன் கண்காட்சி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா தேசிய கண்காட்சியை பார்வையிடுவதற்கென இலட்சக்கணக்கான மக்கள் வருகைத்தந்தனர். வரலாற்றில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த கண்காட்சியின் மூலம் பல்வேறு அனுபவங்கள், சேவை வசதிகள் மற்றும் பல்வேறு பயன்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கண்காட்சியை பார்வையிட வருகைத்தந்த மொனராகலை மக்கள் தெரிவித்துள்ளனர். கண்காட்சிக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 12 வலயங்கள் சார் 515 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து காட்சிக்கூடங்களையும் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதாக எமது விசேட பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை கிராமத்தை அபிவிருத்தி செய்யும் எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா தேசிய கண்காட்சி அடுத்த முறை அனுராதபுரத்திலும், அதற்கு அடுத்த முறை யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் நாட்டின் சகல நகரங்களிலும் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் கண்காட்சியை நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.