குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் போது பல இடங்களில் ஏற்ப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக விவகாரம் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களில் அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் போது ஏற்ப்பட்ட பிரச்சினை குறித்தான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதடன் ஹாலிஎல, ஹப்புத்தளை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட அரிசிகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் அரிசி விநியோகத்தின் போது ஏற்ப்பட்ட பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 536 இந்த திட்டத்திற்கென தகுதிபெற்றுள்ளனர். அதில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேருக்கு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
பகிர்ந்தளிக்கப்பட்ட 11 அரிசி மூடைகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்தது. ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 7 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரிசி மூடைகளின் காலாவதி திகதி மாற்றப்பட்டுள்ளதுடன் அவை ஈரலிப்பாக காணப்பட்டமை தெரியவந்தது.
அத்துடன் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் 4 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரிசி மூடைகளில் துர்நாற்றம் வீசியதுடன் அவற்றிலும் காலாவதி திகதி மாற்றப்பட்டிருந்ததாக தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அரிசி மூடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.