மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ரயில் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலைப் பகுதியைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நடராசா சிவசுப்ரமணியம் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வீட்டில் இரவுநேர உணவு உட்கொண்ட பின்னர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து உறங்கிய வேளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் சம்பவ இடத்திற்குச் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் தொடர்பில் ஏறாவூர்பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.