இலங்கையின் 72 வது சுதந்திர தினம் நாளை கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கும் விசேட சமய வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்திற்கான பௌத்த சமய வழிபாடுகள் கொள்ளுப்பிட்டி தர்மகீர்த்தியா ராம விகாரையில் நாளை காலை இடம்பெறவுள்ளன. இதில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மயுராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இந்து சமய வழிபாடுகள் நாளை இடம்பெறவுள்ளன. இதில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, காதர் மஸ்தான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை வீடுகளிலும் வர்த்தக நிலையங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நாட்டுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.