திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருகோணமலை சல்லி சாம்பல் தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரென தெரியவந்துள்ளது.
நேற்றிரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற அவர் இன்று காலை வீடுதிரும்பிய சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்பு அதிகரித்தமையினால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. படகிலிருந்து பாய்ந்த குறித்த நபர் படகில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் பகுதியுடன் மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிபொலிசார் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.