எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை படைத்த அந்தனி ஜீவா காலமானார்.
மலையக எழுத்துக்களைப் புதிப்பிக்கும் முயற்சிகளில் பங்களித்து வந்த அந்தனி ஜீவா 1944 மே 26 இல் பிறந்தார்.
கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக இல்லாமல், சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்ட ஒருவர் என்றால் மிகையாகாது.
1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது.
1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார்.
மலையக இலக்கியங்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் அந்தனி ஜீவாவுக்கு உண்டு.
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.
கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற அந்தனி ஜீவா தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
மலையகத்தின் தேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘குறிஞ்சிக் குயில்கள்’ என்னும் நூலினை 2002 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கொண்டு வந்தார்.
‘அம்மா’ என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தார். பெண் படைப்பாளர்களை கொழுந்து இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா.
மலையகத்தில் 1980களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையே சேரும். அத்துடன் அவர் 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
அன்றும் இன்றும் இலக்கியம் படைத்த அந்தனி ஜீவா இன்று காலமானார்.
அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.