வெளிநாட்டில் இருந்த கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனுத்தராவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் கட்டிய புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 04ஆம் திகதி, குறித்த பெண் தன் கணவருக்கு காணொளி அழைப்பினை ஏற்படுத்தியதுடன், தனது அறையில் உள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதன்போது, எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறுதிக் கிரியைகள் நாளை (08) மாலை உடுமுல்லை மயானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.