அத்தியாவசிய பொதுச் சேவைகள் வழங்கல், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்தல், பல்வேறு ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளல், பண்டங்கள் மற்றும் சேவைகள் வழங்களுக்குரிய சந்தை நடவடிக்கைகளில் இடையீடு செய்தல், வளங்களை நியாயமாக பகிர்ந்தளித்தல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சமுதாய நலன்புரிகள் போன்ற முக்கிய பணிகள் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் தவிர்ந்த 86 திணைக்களங்கள், 25 மாவட்டச் செயலகங்கள் மற்றும் 339 பிரதேச செயலகங்கள், அரசுக்கு சொந்தமான 340 தொழில்முயற்சிகள் மற்றும் வர்த்தகரீதியற்ற 115 நியதிச்சட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கிவருகின்றன.
தேசிய வரவுசெலவு திட்டத்தின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகின்ற வர்த்தக ரீதியற்ற 115 அரச நியதிச்சட்ட நிறுவனங்களுக்காக மற்றும் அரச தொழில்முயற்சித் திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற 51 நிறுவனங்களுக்காக 2021ஆம் ஆண்டில் தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 140 பில்லியன் ரூபாயகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் குறித்த நிறுவனங்கள் இற்றைப்படுத்தப்படாமை, ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதாக இன்மை அல்லது பொருத்தமின்மை, குறித்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் தனியார் துறையினரால் மிகவும் வினைத்திறனான வகையில் மேற்கொள்ளப்படல் மற்றும் ஒரே ஒத்த பணிகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள் ஒருசிலவும் காணப்படுகின்றனமை போன்ற விடயங்களால் அரசுக்குச் சொந்தமான வர்த்தக ரீதியற்ற நிறுவனங்கள் தொடர்பாக மீளாய்வு மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.
அதற்கமைய அவ்வாறான மீளாய்வை மேற்கொண்டு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.