சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான அனைத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து லொரென்சோ புத்தா-04 எனும் ஆழ்கடல் மீன்பிடிப்படகில் கடற்றொழில் மேற்கொள்வதற்காக புறப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் கடத்தபட்டதுடன் இலங்கை அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக சீசெல்ஸ் கரையோரக் காவற்படை மற்றும் கடற்படையினரால் இம் மீனவர்கள் மீட்கப்பட்டதுடன் கடற் கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சீசெல்ஸ் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இம் மீனவர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்றையதினம் (06) மீனவர்களின் உறவினர்கள் அமைச்சரைச் சந்தித்து முறையிட்டனர். இதன் போது அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
மீனவர்களை அழைத்து வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்காக நான் வருத்தமடைகிறேன். இது போன்ற சம்பவமொன்றுக்கு இலங்கை முதல் தடவையாக முகங்கொடுத்துள்ளதால் இதிலுள்ள சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளுக்கு கால அவகாசம் தேவையாக உள்ளது.
எமது கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான அனைத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சரவையிலும் நான் பல முறை பேசியுள்ளேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் வெளிவிவகார அமைச்சுக்கும் உரிய அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இவர்களை எதிர்வரும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தை ஆகியோரும் கலந்து கொண்டனர்.