பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது சொந்த பணத்தில் இருந்து நட்டஈட்டை வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்த பொதுமகன் ஒருவருக்கே தமது தனிப்பட்ட நிதியில் இருந்து 2 மில்லியன் ரூபாயை வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மீரிஹான பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸார், மனுதாரரான டபிள்யூ.ரஞ்சித் சுமங்கலவை சட்டவிரோதமாக கைது செய்து, தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் மூலம், அவர்கள் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.