அஸ்வசும நலத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாத கொடுப்பனவு வழங்கப்படவில்லை
Related Articles
அஸ்வசும சமூக நலத் திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதத்திற்கான ஏனைய கொடுப்பனவுகளைப் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி ஜுலை மாதம் தொடர்பான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களில் வழங்க முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயல்பாடு) ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘அஸ்வசும’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பயனாளிகளின் பட்டியலுக்கு எதிராக சுமார் 10 லட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன.
10 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் 7 இலட்சம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 3 இலட்சம் மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர 5 இலட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் ஜூலை மாதத்திற்கான சமுர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் தற்போதுள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் முதல் கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் (செயல்பாடு) ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.