தமிழ் தேசிய கட்சியில் இருந்து சிவாஜிலிங்கம் நீக்கம்
Related Articles
எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை என தெரிவித்த தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான, முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனை ஏனைய தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் – என்றார்.