சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 203 மில்லியன் சிகரெட்டுகள் இன்று அழிக்கப்படவுள்ளன. இது இலங்கை வரலாற்றில் இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை புகையிலை கூட்டுத்தாபனத்தால் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய சட்டவிரோத சிகரெட் தொகையென கருதப்படுகிறது.
2021ஆம் ஆண்டு இந்த சிகரெட் தொகை 21 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இவற்றின் பெறுமதி 9.7 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் ஏற்றுமதியாளர் ஒருவர் துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் ஊடாக சட்டவிரோதமாக இந்த சிகரெட்டுக்களை இறக்குமதி செய்துள்ளார்.
இவை நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு மீள அனுப்பப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்திருந்தது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் நோனிஸ் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று காலை முத்துராஜவெலவில் அமைந்துள்ள கழிவு சக்தி அனல் மின் நிலையத்தில் இந்த சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.