சிறந்த புனைக்கதைக்காக பார்பரா கிங்ஸ்லோவர் மற்றும் ஹெர்னான் டையஸ் ஆகியோருக்கு புலிட்சர் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகம், இலக்கியம், இசை போன்ற 21 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இது மிக உயரிய விருதாக மதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதுகளை வழங்குகிறது.
ஹங்கேரியைச் சேர்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவர் நிறுவியதுதான் புலிட்சர் விருது. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு ஜோசப் புலிட்சர் வழங்கிய தொகையில் இருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 1917-ம் ஆண்டு முதல் புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதில், பார்பரா கிங்ஸ்லோவர் எழுதிய ‘டெமன் கூபர்ஹெட்’ என்ற நாவல் மற்றும் ஹெர்னான் டையஸ் எழுதிய ‘ட்ரஸ்ட்’ என்ற நாவலுக்கு புலிட்சர் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.