வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 12 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் (44 வயது) அவரது மனைவி (42 வயது) மற்றும் அவருடைய தந்தை (70 வயது) ஆகியோரே அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த சிறுவன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.