மார்ச் 08ஆம் திகதி வரலாறுகளின் பொன்னாள். கிடைக்கவேண்டிய உரிமைக்காய் போராடி குரல் கொடுத்து அங்கீகரிக்கப்படவேண்டிய நாளாக உலகுக்கு உணர்த்தப்பட்ட நாள், சர்வதேச மகளிர் தினம். வருடாவருடம் ஒவ்வொரு தொனிப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் “பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்” என்பதாகும்.
மகளிர் தினத்திற்கு வித்திட்ட அடிப்படையை பார்த்தால்,
1908இல் 15,000 பெண்கள் வரையில் நியூயார்க் நகரத்தின் வழியாக, குறைந்தளவு வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்ற நிகழ்வு இந்நாளுக்கான அடித்தளமாய் இருந்தது.
அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி பெண்ணிடமிருந்து வந்தது.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை பரிந்துரைத்தார்.
அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அதன்பொருட்டு மகளிர் தினம் முதன் முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது.
இருப்பினும், 1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
இந்நிலையில் 1996ல் ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்” என்பதாகும்.
ஆண்டாண்டாக மகளிர் தினத்தை நினைவு கூர்ந்தாலும் பெண்களுக்கான உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கிறது. வானளவு சாதனை படைக்கும் பெண்களிருந்தாலும் இன்னும் அடிமை விலங்கை உடைத்தெறிய முடியாத பெண்களும் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஏன் இந்த பிறப்பெடுத்தோம் என்று வேதனை கொள்ளும் அளவிற்கு பெண்களுக்கான வன்முறைகள் அதிகமாகவே தோற்றம் பெற்றுள்ளன.பெண்களுக்கு பெண்களாலும், ஆண்களாலும் இடம்பெறும் துன்புறுத்தல்கள் இல்லாமல் ஒழிய வேண்டும்.
பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்றனர். பரந்த சிந்தனை திறன் கொண்டவர்களையும் அடக்கி ஆளும் மனநிலையிலேயே பலர் இருக்கின்றனர்.
எல்லாப்பெண்களும் தங்கள் வாழ்க்கையில் பல பரிமாணங்களை பல்துறையிலும் இலகுவில் நிலை நாட்டுபவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்களை கொண்டாடவிட்டாலும் அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிட வேண்டும்.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே!
மகாகவி பாரதியார்