சட்டவிரோத கையடக்கத் தொலைபேசி இறக்குமதிக்கு கடும் சட்ட நடவடிக்கை
Related Articles
இலங்கைக்கு சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க நிதியமைச்சு உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதால் இலங்கைக்கு பாரியளவு வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் நிதியமைச்சில் நடைபெற்ற கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
“சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்கள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRCSL) பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் தவறான இடங்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் ஏற்பட்டால் இந்த எண்ணைப் பயன்படுத்தி தொலைபேசி அடையாளம் காணப்படுகிறது. ஆனால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைபேசிகள் TRCSL இல் பதிவு செய்யப்படுவதில்லை” என்று அமைச்சர் கூறினார்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர், சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கும் வர்த்தக முதலீட்டுக் கொள்கை திணைக்களத்திற்கும் பணிப்புரை விடுத்தார்.