ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் அதில் பங்கேற்கவுள்ளனர். மாலை 04.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைதிரிபால சிறிசேன, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ம் திகதி சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிலையில் நல்லிணக்க வேலைத்திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பில் இன்று விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.