பெந்தொட்ட கஹகல்ல வடுமுல்ல பகுதியில் நோயிலிருந்து குணப்படுத்துவதாக தெரிவித்து மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்த பேயோட்டி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சிறுமியின் தாயார் மற்றும் அவரது உறவினர் ஒருவர் சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த பேயோட்டி தந்தைக்கு அறிமுகமானவரென தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலிலுள்ள நோயை குணப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டதன் பின்னர் சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் 3 தடவைகளில் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். சிறுமியின் உடலில் ஆபத்தை விளைவிக்கும் நோய் இருப்பதால் கடவுளின் கட்டளைப்படி அதை குணப்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி சித்தரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமியின் தந்தை அழுத்கம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான பேயோட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.