அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3வது போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கட்டுக்களினால் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற பகலிரவு போட்டியில் நாணய சூழற்ச்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடியது.
50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 291 ஒட்டங்களை அவுஸ்திரேலியா வீரர்கள் பெற்றுக்கொண்டனர். அணியின் துடுப்பாட்டத்தில் ட்ரெவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் எரோன் பின்ச் 52 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்ததோடு, எலெக்ஸ் கெரி 49 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வென்டசே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
292 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்க நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது கண்ணி சதத்தையும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவு செய்தார். குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களை பெற்றிருந்த போது தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். 2வது விக்கட்டுக்காக குசல் மற்றும் பெத்தும் நிஷங்கவிற்கு இடையில் 170 ஓட்டங்கள் பகிரப்பட்டது. அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜெய் ரிச்சட்சன் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக பொத்தும் நிஷங்க தெரிவு செய்யப்பட்டார். 5 போட்டிகளை கொண்ட தொடரின் 2 : 1 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.