நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி பொதுச் செயலாளர் கலீத் கியாரி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸை இன்று சந்தித்தார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஒவ்வொரு தருணத்திலும் இலங்கை ஐ.நாவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி பொதுச் செயலாளர் கலீத் கியாரி இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஐநா பொதுச் சபையின் 76 வது கூட்டத் தொடருக்கு இணைவாக ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தொடர்ச்சியாக இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றுடன் உக்கிரமடைந்துள்ள பொருளாதார சவால்கள் மற்றும் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கியாரிக்கு தெளிவுப்படுத்தினார். பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளிட்ட நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் தெளிவுப்படுத்திய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கென அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.