பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் பெண்ணொருவருடன் ஹெரோயின் போதைப்பொருளை பொதியிட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கான்ஸ்டபள் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதான 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபள் கொக்கல பிரதேசத்தை சேர்ந்தவரெனவும், ஹுங்கம பொலிஸ் பிரிவில் இணைந்து கடமையாற்றியவரெனவும் தெரியவந்துள்ளது. அவருடன் இருந்த 41 வயது பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சந்தேக நபர் தலல்ல பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து 28 கிரேம் 580 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.