கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய சம்பவத்தை முன்னிலைப்படுத்தி மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணி முதல் மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் அரசாங்கத்துக்கு உள்ள நூற்றுக்கு 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் துறைமுக, நீர்வழங்கல் கனிய எண்ணெய் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. எனினும் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றபோதிலும் மின்தடை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.