பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தமது தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை இன்றுடன் நிறைவுக்கொண்டு வருவார்கள் என சகலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பணிப்பகிஷ்கரிப்பு அவ்வாறே முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி 94 நாட்களாக ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தலையீடுகளை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசிரியர் , அதிபர் தொழிற்சங்கங்களுடன் நேற்றைய தினம் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்க அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் யோசனைக்கமைய 3 கட்டங்களில் சம்பளத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டம் 2022ம ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும் ஏனைய இரண்டு கட்ட சம்பளம் அதிகரிப்பு 2023ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக வழங்கவும் யோசனை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த யோசனைகளுக்கு இணங்கப்போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று தமது தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.