ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறியதன் பின்னர் முதற்தடவையாக அங்கிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. சர்வதேச நாட்டவர்கள் பலர் குறித்த விமானத்தின் ஊடாக காபூலில் இருந்து கட்டார் டோஹாவிற்கு வருகை தந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கட்டாருக்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் வருகை தந்தவர்களில் பிரித்தானிய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்டாரிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிலிங்கன் அண்மையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். அமெரிக்க படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை அங்கிருந்து அழைத்து செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த மாதம் அமெரிக்க படை முற்றிலுமாக வெளியேறியதால் குறிப்பிட்ட சிலரை மாத்திரமே அங்கிருந்து அழைத்து வரமுடிந்தது. இந்நிலையில் கட்டாரின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும் அழைத்து வரப்பட்டனர். நேற்றைய தினம் காபூலில் இருந்து கட்டார் நோக்கி; சென்ற விமானத்தில் 113 பேர் பயணித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.