தாய்லாந்தில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 ஆயிரத்து 200 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 188 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வருடம் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதிவான அதிகூடிய தொகை இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை தாய்லாந்தில் 6 இலட்சத்து 72 ஆயிரத்து 385 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 5 ஆயிரத்து 503 பேர் கொரோனா பாதிப்புக்களினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள், அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே நாளொன்றில் அதிகூடிய தொகையாக 18 ஆயிரத்து 912 தொற்றாளர்களும், 178 மரணங்களும் கடந்த சனிக்கிழமை பதிவாகியிருந்தன. அதனையடுத்து தலைநகர் பெங்கொக் மற்றும் அதி அபாயமிக்க மாகாணங்களில் அந்நாட்டு அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.