பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு நகரை அண்மித்ததாக முன்னெடுக்கப்படும் 5 மழை நீர் கட்டுப்பாடு வேலைத்திட்டங்கள் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மருதானை புனித செபஸ்டியன் தெற்கு கால்வாய் மார்க்கம் வேலைத்திட்;டம் , புனித செபஸ்டியன் வடக்கு கால்வாய் மார்க்க வேலைத்திட்டம், கொலன்னாவை களுபாலம் கால்வாய் மார்க்க வேலைத்திட்டம், கொத்தட்டுவ கால்வாய் மார்க்க வேலைத்திட்டம் மற்றும் அம்பத்தலை கால்வாய் மார்க்க வேலைத்திட்டங்கள் என்பன இவ்வாறு நிறைவு கட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிக மழை நிலவும் சந்தர்ப்பங்களில் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதே இந்த திட்டங்களின் நோக்கமாகும். இதற்கென 321 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 213 மில்லியன் டொலர் உலக வங்கியின் நிவாரண கடன் அடிப்படையில் கிடைக்கப்பெறும். இலங்கை அரசாங்கம் 108 மில்லியன் அமெரிக்க டொலரை திட்டத்திற்கென முதலீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா நேரில் சென்று பார்வையிட்டார்.