இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் மினோத் பானுக 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 34 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 1 விக்கெட்டினையும் வீழ்த்திய இலங்கையின் தனஞ்சய டி சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.