நாட்டின் 19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உட்பட்ட 325 களஞ்சியங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்தார்.
தேவைப்படும் பட்சத்தில் தனியார் துறையின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள சபை எதிர்பார்த்துள்ளது .
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 310 கோடி ரூபா கிடைத்துள்ளது.
வரலாற்றில் முதற் தடவையாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களையும் ஓர் இடத்திற்கு கொண்டு வர விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களால் முடிந்திருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் கூறினார்.
சந்தையில் அனைத்து அரிசி வகைகளையும் 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.