நாவற்குழியில் புகையிரத மார்க்கத்தின் தண்டவாளங்களை பொருத்தும் உபகரணங்களை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14 ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கிளிப்புகள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். இதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய 48 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த உபகரணங்களை கொள்வனவு செய்த மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.