உலக கிண்ண டுவண்டி 20 கிரிக்கட் தொடர் நடத்தப்படும் இடம் குறித்து தொடர்ந்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. 7வது டுவண்டி 20 கிரிக்கட் தொடரை எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா 2ம் அலை காரணமாக தற்போது இந்தியாவில் போட்டியை நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளது. போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம், தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது தொடர்பில் இந்திய கிரிக்கட் சபை தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இடத்தை தெரிவு செய்வதற்கென 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய டுவண்டி 20 உல கிண்ண தொடர் இந்தியாவில் நடத்தப்படுமா, அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதிக்குள் தீர்மானம் அறிவிக்கப்படவேண்டும்.
அதற்கமைய ஐசிசி இறுதி தீர்மானத்தை எடுக்குமென செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை இனிவரும் ஆண்டுகளில் இரு வருடங்களுக்கு ஒரு முறை டுவண்டி 20 உலக கிண்ண தொடரை நடத்துவது குறித்தும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்துவது குறித்தும் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.