கொவிட் தொற்றினால் மேலும் 29 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மொத்த கொரோனா மரண எண்ணிக்கை ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மரணங்களில்
நேற்றைய தினத்தில் இருவரும், ஏனைய 27 மரணங்களும் 20ம் திகதி முதல் 25ம் திகதிவரையான காலப்பகுதியிலும் பதிவாகியுள்ளன. நேற்றைய மரணங்களில் 16 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 20 வயதான யுவதி ஒருவரும் கொவிட் தொற்றினால் மரணித்துள்ளார். இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவடைந்ததால் ஏற்பட்ட இருதய மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டுள்ளது. பதுளை ஹாலியெல பகுதியை சேர்ந்த குறித்த யுவதி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் நாட்டில் 2 ஆயிரத்து 377 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.