போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். டுபாய் ஊடாக அவர் இத்தாலி செல்ல முயற்சித்துள்ளார். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததால், அவர் விமான சேவை அதிகாரிகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், யுவதி சமர்ப்பித்த ஆவணங்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது பயணப் பையை சோதனையிட்டபோது, அதிலிருந்து செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.