பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஒரு சிலரின் தேவைக்கு ஏற்ப நாட்டின் அரிசி வர்த்தக சந்தையை கட்டுப்படுத்துகின்ற வரலாற்றுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தேவையான அரிசியை களஞ்சியப்படுத்தி வைக்க நெற் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைய இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடை சந்தைக்கு கிடைத்துள்ளது. சுமார் 32 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைத்துள்ளது. நாட்டின் மொத்த அரிசிக்கான தேவையில் 8 மாதங்களுக்கு போதுமானதாகவுள்ளது. அதேபோன்று அடுதத்து வரும் சிறுபோகத்திலும் சிறந்த நெல் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்ப்டுகின்றது. இதற்கு தேவையான நீர்ப்பசனங்களும் காணப்படுகின்றன. 5 அல்லது 6 மாத காலங்களுக்கு இதன் மூலம் அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கின்றோம். இதனால் இவ்வருடத்தில் அரிசிக்கோ நெல்லுக்கோ எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாதென கூறிக் கொள்கின்றேன். இவ்வருடத்தில் 28 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. நெற் சந்தைப்படுத்தும் சபையினால் பாதுகாப்பான நெற் தொகுதியை பெற்றுக் கொள்வதற்கு முறையான தேசிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ள்து. சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுமென்ற சந்தேகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.”