நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் எதிர்வரும் 7ம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு வீடுகள், வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் வாகனங்களிலும், தேசிய கொடியை பறக்கவிடுமாறு உட்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெப்ரவரி 4ம் திகதி நாட்டின் 73வது சுதந்திர தினம் வழமை போன்று கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது. முப்படையினர், பொலிசார் சிவில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட வழமையான அம்சங்கள் இம்முறையும் காணப்படுமென உட்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இன்றைய தினமும் விசேட போக்குவரத்து நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் , பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இன்று காலை 6 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து நடவடிக்கை பிற்பகல் ஒரு மணி வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.