ஒரு தொகை கழிவுத்தேயிலையுடன் 7 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 29 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகொட பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை தேயிலை எனும் நாமத்தின் கீழ் கழிவுத்தேயிலை தொகை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கழிவுத்தேயிலையை எடுத்துச்செல்வதற்கென வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றுடன் கூடிய ட்ரக் வண்டி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தேசிய தேயிலை சபைக்கு அறிவித்ததையடுத்து அதன் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர். னைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட தேயிலை தொகையுடன் சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நாளைய தினம் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் சீதுவ பொலிஸார் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமையினால், இலங்கை தேசியலையின் (சிலோன் டீ) எனும் நாமத்திற்கு சர்வதேசத்தில் காணப்படும் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. இதனால் குறித்த செயற்பாடுகளில் ஈடுப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.